பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி புதைப்பு


பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி புதைப்பு
x

மூங்கில்துறைப்பட்டு அருகே பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி மர்மநபர்கள் புதைத்துள்ளனர். அவரது உடலை 4 நாட்களுக்கு பிறகு போலீசார் தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனர்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

சந்தேக இடம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே புதூர் ஏரியில் சுடுகாடு உள்ளது. இங்கு சம்பவத்தன்று பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்ததற்கான அடையாளம் காணப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், யாரையோ கொன்று அங்கு புதைத்திருப்பதாக கருதி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர் அப்போது தாசில்தார் நேரில் வந்து ஆய்வுசெய்த பிறகே குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க முடியும் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் 4 நாட்கள் ஆகியும் தாசில்தார் வராததால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டனர்.

பெண் பிணம்

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மூத்த உதவி பேராசிரியர் ராம்குமார் மற்றும் வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் புதூர் சுடுகாட்டுக்கு வந்தனர்.

பின்னர் தாசில்தார் பாண்டியன் முன்னிலையில் சந்தேகத்துக்குரிய இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அதில் சாக்குமூட்டை ஒன்று இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, அதற்குள் தலையில் படுகாயங்களுடன் 45 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் இருந்தது. அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

பிரேத பரிசோதனை

மேலும் அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், டாக்டர்கள் சம்பவ இடத்திலேயே பிரேதபரிசோதனை செய்தனர். இதையடுத்து மீண்டும் அதே பள்ளத்தில் அந்த பெண்ணின் உடல் புதைக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து போலீசார் கூறுகையில், யாரோ மர்மநபர்கள் அந்த பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் உடலை கட்டி, இங்கு கொண்டு வந்து புதைத்திருக்கலாம். ஆனால் அந்த பெண்ணை பற்றியும், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்?, அவரை கொலை செய்த நபர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

பெண்ணை கொன்று உடலை சாக்கு மூட்டையில் கட்டி புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story