சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு - சேலத்தை குறிவைத்து இறங்கிய சிபிசிஐடி


சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு - சேலத்தை குறிவைத்து இறங்கிய சிபிசிஐடி
x

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

சேலம்,

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் சேலம் மாவட்டத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா கார் ஓட்டுனர் கனகராஜ் மரணம் தொடர்பான விசாரணையை சேலத்தில் முகாமிட்டு நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும் தனது சகோதரர் கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும் திட்டமிட்ட கொலை என்றும் சமீபத்தில் கனகராஜ் சகோதரர் தனபால் குற்றம் சாட்டியிருந்த நிலையில் சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சேலத்தில் முகாமிட்டு விசாரணையை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு:-

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது.

இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




Next Story