கோடநாடு கொலை வழக்கில்; சென்னை உதவி போலீஸ் கமிஷனர் வீட்டில் திடீர் சோதனை


கோடநாடு கொலை வழக்கில்; சென்னை உதவி போலீஸ் கமிஷனர் வீட்டில் திடீர் சோதனை
x

கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக சென்னை உதவி போலீஸ் கமிஷனர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சென்னை,

நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. சி.பி.சி. ஐ.டி. போலீசார் அந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். சென்னை ஆவடி ஆயுதப்படை உதவி போலீஸ் கமிஷனர் கனகராஜ் மீது திடீரென்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் பார்வை திரும்பி உள்ளது. கனகராஜ் சென்னை மந்தைவெளியில் சி.ஐ.டி. போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார்.

நேற்று காலை 6 மணி அளவில், கனகராஜ் வீட்டில் இருந்தார். அப்போது கோடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் கனகராஜ் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

4 மணி நேரம் விசாரணை

சுமார் 4 மணி நேரம் சோதனை நீடித்தது. கனகராஜிடமும் விசாரணை நடந்தது. காலை 10 மணி அளவில் சோதனையை முடித்துக்கொண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாங்கள் வந்த 3 வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். சோதனையில் கோடநாடு கொலை தொடர்பான ஆவணங்கள் எதுவும் சிக்கியதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

கனகராஜ் இன்ஸ்பெக்டராக இருந்தபோது, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story