கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா


கோவில்களில் நடைபெற்ற கிருஷ்ண ெஜயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

கோவில்களில் நடைபெற்ற கிருஷ்ண ெஜயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி சந்தான பாலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பாபநாசம், குற்றாலம், ராமேஸ்வரம், அய்யனார் கோவில் போன்ற புனித தலங்களில் இருந்து புனித நீர் எடுத்து மற்றும் பால்குடம் எடுத்து வீதி உலா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு பால், பன்னீர், தேன், இளநீர் போன்ற 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சுவாமி தட்டு சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தலைவர் சச்சிதானந்தம், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் கருமலை மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணியினர் செய்திருந்தனர்.

பஜனை பாடல்கள்

வெம்பக்கோட்டை ஒன்றியம் வன மூர்த்தி லிங்கபுரம், கணஞ்சாம்பட்டி, குகன்பாறை உள்ளிட்ட கிராமங்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவிலில் பஜனை பாடல்கள் பாடி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

ஆலங்குளம் அருகே உள்ள கொங்கன்குளம் கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதேபோல கீழாண்மறைநாடு, புலிப்பாரைபட்டி ஆகிய கிராமங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை சீனிவாசக பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்திர சாய் பெருமாள் மற்றும் கிருஷ்ணர் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் நள்ளிரவு குழந்தை கிருஷ்ணன் பிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தங்கத்தொட்டிலில் கிருஷ்ணர் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நள்ளிரவில் நடைபெற்றன.


Next Story