கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் அமைகிறது தமிழகத்தின் 17-வது வனவிலங்கு சரணாலயம்


கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் அமைகிறது தமிழகத்தின் 17-வது வனவிலங்கு சரணாலயம்
x

தமிழகத்தின் 17-வது வனவிலங்கு சரணாலயம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் அமைகிறது. இதற்கு புதிய காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள 686.405 சதுர கி.மீ. பரப்பிலான காப்புக்காடுகளை காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயமாக வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972, பிரிவு 26ஏ-ன் கீழ் 8-ந்தேதியன்று (நேற்று) தமிழக அரசு அறிவிக்கிறது. அரசு, கடந்த ஓராண்டில், கழுவேலி பறவைகள் சரணாலயம் (விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள்), நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் (திருப்பூர் மாவட்டம்), கடவூர் தேவாங்கு சரணாலயம் (கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்) மற்றும் கடற்பசு பாதுகாப்பகம் (தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) போன்றவற்றை வன உயிரின பாதுகாப்பு சட்டம், 1972-ன் கீழ் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்துள்ளது.

இந்த சரணாலயமானது, தமிழ்நாட்டின் காவிரி வடக்கு வன விலங்கு சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி வன விலங்கு சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் பெரியதொரு பாதுகாப்பு பகுதியாக அமைகிறது. இப்பகுதி சூழலியல் பாதுகாப்பு மற்றும் தாவர இனங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விட பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முக்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதியானது தென்னிந்தியாவில் யானைகள் வாழ்விடங்களில் முக்கியமானதாகவும் காவிரி ஆற்றுப்படுகையில் வன உயிரினங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகவும் அமைகிறது.

யானைகள் வழித்தடம்

இந்த சரணாலய பகுதி நீலகிரி உயிர்கோள காப்பக பகுதி வரை, தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வன விலங்கு வாழ்விடத்தை ஏற்படுத்துகிறது. இந்த சரணாலயத்தின் தொடர்ச்சியாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், காவிரி வனவிலங்கு சரணாலயம், மலை மாதேஸ்வரா வன விலங்கு சரணாலயம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கணக்கெடுப்புகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தொடர்ச்சியாக உள்ளதால், இப்பகுதியில் மீண்டும் புலிகள் எண்ணிக்கையை மீட்டெடுக்க ஏதுவாக அமையும்.

மேலும், சிறுத்தைகள் மற்றும் அழியும் நிலையில் உள்ள மாமிச உண்ணிகளின் வாழ்விடத்தை மேம்படுத்தவும் ஏதுவாக அமையும். அறிவிக்கை செய்யப்பட்ட இந்த சரணாலயம் இரு முக்கிய யானைகள் வழித்தடமான நந்திமங்கலம்-உழிபண்டா மற்றும் கோவைபள்ளம்-ஆனபெத்தள்ளா ஆகிய இடங்களை கொண்டுள்ளது.

மண் வளம்-நீர் வளம்

புதிய சரணாலயம் 35 வகையான பாலூட்டிகள், 238 வகையான பறவைகள் மற்றும் 103-க்கும் மேற்பட்ட மரவகைகளை கொண்ட உயிர்பன்மை மிக்க பகுதியாக காணப்படுகிறது. காவிரி ஆற்றுப்படுகையான இங்கு, டெக்கான் மஹனீர் மீன்கள், ஹம்ப்பேக்டு மஹனீர் மீன்கள், மெல்லிய ஓடுடைய ஆமைகள், மலை அணில்கள், நீர்நாய்கள், முதலைகள், நாற்கொம்பு மான்கள் போன்ற அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் காணப்படுகின்றன.

இப்பகுதியானது 50 கி.மீ. தொலைவிற்கு காவிரி ஆற்றுப்படுகையில் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டு, மேட்டூர் அணை வரை தாழ்வான காப்பு காடுகளை உள்ளடக்கியது. இப்பகுதியை சரணாலயமாக அறிவிப்பதன் மூலம், வன உயிரினங்களின் வாழ்விடம் மீட்டெடுக்கப்படும். இதன் மூலம் காவிரி ஆற்றுப்படுகையின் மண்வளம் மற்றும் நீர் வளம் பாதுகாக்கப்படும்.

மேற்கண்ட தகவல் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

காவிரி தெற்கு காட்டுயிர் காப்பகத்தை தமிழ்நாட்டின் 17-வது காட்டுயிர் காப்பகமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் செயல்படுத்தி வரும் பசுமை இயக்கங்களின் செயல்பாடுகளோடு இந்த முக்கிய முன்னெடுப்பு நமது மாநிலத்தின் வளமிகுந்த பல்லுயிர் சூழலை காப்பதில் பெரும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story