செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம்


செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம்
x

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள மகா குபேரனுக்கு ஒவ்வொரு மாதமும் குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று மகா குபேர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பூரட்டாதி நட்சத்திரத்தையொட்டி மகா குபேரனுக்கு ஹோமமும், சிறப்பு வழிபாடும் வெகு விமரிசையாக நடந்தது. சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது குபேர ஹோமமும் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சித்ரலேகா சமேத மகா குபேரனுக்கு பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குபேர ஹோம வழிபாட்டில் கலந்து கொண்டால் கடன் தீர்ந்து செல்வம் சேரும், செல்வாக்கு உயரும் என்பதும், தொடர்ந்து 3 முறை குபேர ஹோம வழிபாட்டில் கலந்து கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் ஐதீகம். இதனால் பெரம்பலூர் மாவட்டமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு மகா குபேரனுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்து, தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பச்சை குங்குமம் மற்றும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலில் அடுத்த குபேர ஹோமம் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடக்கிறது.


Next Story