தென்தமிழகத்தை பாதுகாக்க கூடங்குளம் அணு உலைகளை மூடவேண்டும்: மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்


தென்தமிழகத்தை பாதுகாக்க கூடங்குளம் அணு உலைகளை மூடவேண்டும்: மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
x

தென்தமிழகத்தை பாதுகாக்க கூடங்குளம் அணு உலைகளை மூட வேண்டும் என்று மத்திய அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

கூடங்குளம் அணு உலைகளால் தென்தமிழ்நாடே அழிந்துபோகும் என நான் பலமுறை எச்சரித்து வருகிறேன். உதாரணத்திற்கு ஜப்பானில் புகுசிமா அணு உலை அமைக்கப்பட்டபோதே மக்கள் எதிர்த்தார்கள். அமெரிக்காவில் 3 மைல் தீவில் அமைக்கப்பட்ட அணு உலையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டடனர்.

அதன்பின்னர் சோவியத் ரஷியாவில் அமைக்கப்பட்ட செர்னோபில் அணு உலையில் விபத்து ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் வெளியேறினார்கள்; எண்ணற்றவர்கள் இறந்தார்கள். ஜப்பானில் அணு உலைக் கழிவு நீரை பசிபிக் கடலில் திறந்துவிட்டுள்ளார்கள். ஜப்பானியர்கள் அணு உலையை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.

வழக்கை பற்றி கவலை இல்லை

இதேபோன்று கூடங்குளம் அணு உலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற அணு உலைக் கழிவுநீரை வங்காள விரிகுடாவில்தான் திறந்துவிடுவார்கள். இடிந்தகரை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் அழிந்துபோகும். நம் தலை மீது பேராபத்து கத்திபோல் தொங்குகிறது. கூடங்குளத்தில் அணு உலைகளை மூடுவது ஒன்றுதான் எதிர்காலத்தில் தென்தமிழகத்தை பாதுகாக்கும் என்பதை எண்ணி அரசுக்குச் சொல்வதோடு, இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்கிறேன்.

நிலவில் கால் வைக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் ஒரு பகுதி பூமியே அழிந்துபோகும் என்பதை கவனப்படுத்துகிறேன். 1½ ஆண்டு காலம் இடிந்தகரை மக்கள் போராடினார்கள். ஆனால், அரசுகள் கண்டுகொள்ளவில்லை. போராடியவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டன. என்மீதும் கூட ஒரு வழக்கு இருக்கிறது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. கூடங்குளம் அணு உலைகளால் செந்தமிழ்நாட்டின் தென்பகுதி அழிவுக்கு ஆளாகும் என மீண்டும் எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story