தடுப்புச்சுவர் இல்லாத பாலத்தால் விபத்து அபாயம்

குடிமங்கலம்:
குடிமங்கலம் ஒன்றியத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. இந்த ஓடையின் குறுக்கே போக்குவரத்து வசதிக்காக சில இடங்களில் தரைமட்ட பாலமும் சில இடங்களில் உயர்மட்ட பாலமும் கட்டப்பட்டு உள்ளன. குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட வாகத்தொழுவு ஊராட்சியில் உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த விளை பொருட்களை பாலத்தின் வழியாக கொண்டு செல்கின்றனர். இரவு நேரங்கள் மற்றும் மழை காலங்களில் பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.