சிறுவனை மீட்டு பாட்டியிடம் ஒப்படைத்த போலீசுக்கு பாராட்டு


சிறுவனை மீட்டு பாட்டியிடம் ஒப்படைத்த போலீசுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:45 PM GMT)

சாலையில் அழுது கொண்டு நின்ற சிறுவனை மீட்டு பாட்டியிடம் ஓப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மயிலாடுதுறை

சாலையில் அழுது கொண்டு நின்ற சிறுவனை மீட்டு பாட்டியிடம் ஓப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

4 வயது சிறுவன்

மயிலாடுதுறை அருகே தருமபுரம்-அச்சுதராயபுரம் கிராமத்தைசேர்ந்த வயது முதிர்ந்த தம்பதி சாந்தி, சின்னப்பிள்ளை. இவர்கள் 2 பேரும் தங்களது தோட்டத்தில் விளைந்த கீரையை மயிலாடுதுறை நகரில் விற்பனை செய்வதற்காக தங்களது பேரக்குழந்தை மகேஸ்வரனையும்(வயது 4) அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது மயிலாடுதுறை கண்ணாரத்தெரு முக்கூட்டு என்ற பகுதிக்கு வந்தபோது பேரன் மகேஸ்வரனை எதிர்பாராத விதமாக தவற விட்டனர். இதையடுத்து, அந்த சிறுவன் போக்குவரத்து நிறைந்த அந்த சாலையில் அழுதபடியே கடந்து சென்றுள்ளான்.

போலீசுக்கு பாராட்டு

இதைக்கண்ட அப்பகுதியில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் முத்துகிருஷ்ணன் என்பவர் உடனடியாக சிறுவனை மீட்டு பாதுகாப்பாக அமர வைத்து, சிறுவனுக்கு ஆறுதல் கூறி விவரங்களை கேட்டறிந்தார். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சிறுவனை தேடி பதறியபடி வந்த பாட்டி சாந்தியிடம் சிறுவனை ஒப்படைத்து பாதுகாப்பாக அழைத்து செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். போக்குவரத்தை சீர்செய்வதுடன் தனது பணி முடிந்துவிட்டது என கருதாமல் சாலையில் அழுதபடி சென்ற சிறுவனை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீஸ் முத்துகிருஷ்ணனை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனாவும் அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.


Next Story