முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் அருகே அமரடக்கி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அப்பகுதி கிராமமக்கள் சார்பில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. கடந்த 7-ந்தேதி கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. இதைதொடர்ந்து நான்கு கால யாகசாலை பூைஜகள் நடைபெற்று பூர்ணாகுதி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து திருப்புனவாசல் சுப்பையா குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள் யாக சாலையில் புனிதநீரை நிரப்பி வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை மேள தாளங்கள் முழங்க தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட பகவான் தரிசனத்துடன் முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆவுடையார்கோவில், அமரடக்கி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம ஆன்மீக மெய்யன்பர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அமரடக்கி கிராமத்தார்கள் மற்றும் ஒப்பரைதாரர்கள் செய்திருந்தனர். ஆவுடையார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story