குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடைவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடைவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடைவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள குரங்கணி முத்து மாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழா கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் காலையிலிருந்து அம்மன் தங்க திருமேனி விசேஷ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதியம் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இரவு சிறப்பு பூஜைக்கு பின்பு நாராயண சுவாமி சிறிய சப்பரத்தில் எழுந்தளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நேர்த்தி கடன்

விழாவில் முக்கிய திருவிழா நாளான நேற்று ஆனிகொடை விழாவில் வினாயகர், அம்மன், நாராயணசுவாமி, பெரியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் தங்களது உடல் குறைபாடுகள் நீங்க அங்க பாகங்களை மரக்கட்டையில் செய்து நேர்த்தி கடன் செலுத்தியும், மாவிளக்கில் தீபம் ஏற்றி நோயால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைத்தும் நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபட்டனர்.

சிறப்பு பூஜை

இரவில் கயிறு சுற்றி ஆடுதல், மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் நிகழ்ச்சியும் அதன் பின் ஆனி கொடை விழா சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாராயண சுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழா நாட்களில் காலை, மாலை, இரவு பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், நாதஸ்வர கச்சேரி, நவீன வில்லிசை, இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

போலீசார் பாதுகாப்பு

கோவில் கொடைவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஶ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

விழா எற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் இசக்கியப்பன் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.


Next Story