29 நிறுவனங்களில் தொழிலாளர்துறை அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை மாவட்டத்தில் 29 நிறுவனங்களில் தொழிலாளர்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் 29 நிறுவனங்களில் தொழிலாளர்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு
சென்னை தொழிலாளர்துறை ஆணையர் மற்றும் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி ஆணையின்படி திருச்சி தொழிலாளர்துறை கூடுதல் ஆணையர் மற்றும் இணை ஆணையர் ஆகியோர் அறிவுரைப்படி தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) தனபாலன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் தஞ்சை மாவட்டத்தில் நேற்று 29 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.சட்டமுறை எடையளவு சட்டம்-2009 மற்றும் சட்டமுறை எடையளவு (பொட்டலப்பொருட்கள்) விதிகள் 2011-ன் கீழ் பதிவு சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர்களை கண்டறிதல், அறிவிக்கை இல்லாமல் பொட்டலப்பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டலப்பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
இந்த சட்டத்தின் கீழ் 5 முரண்பாடுகள் காணப்பட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) தனபாலன் கூறும்போது, பதிவுச்சான்று பெறாமல் உள்ள பொட்டலமிடுபவர், இறக்குமதியாளர்கள் உரிய பதிவுச்சான்று பெற வேண்டும். சட்டமுறை எடையளவுகள் விதிகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்யப்படும் பொட்டலப்பொருட்கள் அனைத்தும் உரிய அறிவிக்கைகள் குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்போது பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.






