மங்கலம்பேட்டை அருகே தொழிலாளி அடித்துக் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை- விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு


மங்கலம்பேட்டை அருகே தொழிலாளி அடித்துக் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை- விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Oct 2022 6:45 PM GMT (Updated: 11 Oct 2022 6:46 PM GMT)

மங்கலம்பேட்டை அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கடலூர்

விருத்தாசலம்

அடித்துக் கொலை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பார் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சமுத்து (வயது 53). தொழிலாளி. இவருக்கும் இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் ராமலிங்கம்(37) என்பவருக்கும் இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 25.12.2018 அன்று மஞ்சமுத்து அப்பகுதியில் உள்ள சுடுகாடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமலிங்கம், மஞ்ச முத்துவை ஆபாசமாக திட்டி மரக்கட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த மஞ்சமுத்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 29.12.2018 அன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து மஞ்சமுத்துவின் மனைவி மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 3-ல் வழக்கு தொடுத்தனர்.

இவ்வழக்கில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி பிரபாசந்திரன், குற்றம் சாட்டப்பட்ட ராமலிங்கத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார்.


Next Story