கூலித்தொழிலாளி மர்ம சாவு


கூலித்தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 19 Aug 2023 6:45 PM GMT (Updated: 19 Aug 2023 6:46 PM GMT)

கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்தாா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் சாலாமேடு ஜீவராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் வடமலை (வயது 65), கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துக்கண்ணு (60). இவருக்கு 2 கால்களும் சரிவர நடக்க முடியாது, காதும் கேட்காது. இந்நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முத்துக்கண்ணு, தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் காலை 10 மணியளவில் அவர் கதவை திறந்து வெளியே வந்தபோது வீட்டு வாசல்படியில் வடமலை மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது இடதுபக்க கழுத்துப்பகுதியில் ரத்தக்காயம் இருந்தது. உடனே இதுபற்றி அவர், அருகில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்தனர்.

பின்னர் இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதன் பிறகு வடமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடமலையின் மகன் வடிவேல், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடும்ப தகராறில் தனது மனைவியை கழுத்தை அறுத்துக்கொலை செய்து தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story