போக்குவரத்து மாற்றங்கள் குறித்து முறையான அறிவிப்பு இல்லாத நிலை


போக்குவரத்து மாற்றங்கள் குறித்து முறையான அறிவிப்பு இல்லாத நிலை
x

விருதுநகரில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றங்கள் குறித்து முறையான ஏற்பாடு இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

விருதுநகர்


விருதுநகரில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி போக்குவரத்து மாற்றங்கள் குறித்து முறையான ஏற்பாடு இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

போக்குவரத்து மாற்றம்

வழக்கமாக ஆண்டு தோறும் விருதுநகர் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதுண்டு. இதுபற்றி மாவட்ட போலீஸ் நிர்வாகம் முறையான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதுண்டு.

ஆனால் தற்போது பங்குனி பொங்கல் திருவிழாவிற்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியிடவில்லை. இந்தநிலையில் நேற்று மதுரையில் இருந்து சிவகாசி செல்லும் பஸ்கள் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டதால் சிவகாசி செல்ல வேண்டிய பயணிகள் விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

முறையான அறிவிப்பு

மேலும் மதுரையில் இருந்து சிவகாசி செல்லும் பஸ்சில் வந்தவர்கள் புறவழிச்சாலை சந்திப்பில் இறக்கிவிடப்பட்டு நகருக்குள் வருவதற்கு பெரும் தவிப்புக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டது. இதேபோன்று நகருக்குள் வாகனம் நிறுத்தும் இடங்கள் குறித்தும் முறையான அறிவிப்பு இல்லாததால் ஆங்காங்கே சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் நிலையும் உள்ளது.

எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் இன்று அக்னிசட்டி விழா நடைபெறும் நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய ஏற்பாடுகள் செய்து அது குறித்து நகரில் முறையான அறிவிப்பு வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பஸ் போக்குவரத்து மாற்றம் குறித்தும் பழைய பஸ் நிலையத்தில் முறையான அறிவிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.


Next Story