அரவிந்த்கெஜ்ரிவால் வலியுறுத்துவது போல் ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா? மக்கள் கருத்து


அரவிந்த்கெஜ்ரிவால் வலியுறுத்துவது போல்  ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா?  மக்கள் கருத்து
x
தினத்தந்தி 2 Nov 2022 6:45 PM GMT (Updated: 2 Nov 2022 6:45 PM GMT)

அரவிந்த்கெஜ்ரிவால் வலியுறுத்துவது போல் ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா? என்பதற்கு மக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி

அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்துவதுபோல ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமானதா? என்பது பற்றி மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

பணமா, குணமா என்றால் இன்றைய நாகரிக உலகில் பெரும்பாலும் பணத்துக்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது. பணத்தை வைத்து தான் ஒருவருடைய அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பணம்... பணம்... பணம்... இந்த வார்த்தை ஒன்றுதான் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட பணத்தின் மதிப்பை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1882-ம் ஆண்டு முதல் முறையாக காகித பணம் புழக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. ரூ.2, ரூ.5, ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் நோட்டுகள் நாளடைவில் கைவிடப்பட்டன.

அதன்பின்னர், 1969-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 100-வது பிறந்தநாளையொட்டி, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. 1987-ம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டையும், 2000-வது ஆண்டில் ரூ.1,000 நோட்டையும் புழக்கத்துக்கு விட்டனர். 2016-ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டும் வந்தது. இப்போது 1,000 ரூபாய் நோட்டு மட்டும் புழக்கத்தில் இல்லை.

ரூபாய் நோட்டுகள்

இப்படியாக ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், அதில் பொறிக்கப்பட்ட படங்களின் வரலாறும் அனைவராலும் பேசப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பின், வெளியான ரூபாய் நோட்டில் நான்கு முக சிங்கங்கள் உருவம் பொறிக்கப்பட்டு வெளியானது. அதனைத்தொடர்ந்து புலி, மான், தஞ்சை பெரிய கோவில், மும்பை கேட்வே ஆப் இந்தியா, நாடாளுமன்றம், பசுமைப்புரட்சி-உழவுத்தொழில்-விவசாய வேலைகள்-அணைக்கட்டுகள், இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா, ஹிராகுட் அணை, டிராக்டர் படங்கள் ரூபாய் நோட்டுகளில் உருவங்களாக பொறிக்கப்பட்டு வெளிவந்தன. இன்று நாம் பயன்படுத்தக்கூடிய ரூபாய் நோட்டுகளில் முகப்பு பக்கத்தில் காந்தியின் உருவப்படம் இருக்கிறது. இதன் வரலாறை பார்த்தோமானால், 1969-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகளில்தான் காந்தியின் உருவப்படம் முதன் முதலாக பொறிக்கப்பட்டது. பின்னர் நாளடைவில் மற்ற ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, 1996-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் அனைத்து ரூபாய் நோட்டுகளின் முகப்பில் பெரிய அளவிலான காந்தியின் உருவப்படமே பொறிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நோட்டுகளின் மறுபக்கத்தில் இந்தியாவின் நினைவு சின்னங்கள், பாரம்பரிய இடங்களின் படங்களும் அப்போது முதல் இடம்பெற்று வருகின்றன.

லட்சுமி, விநாயகர் உருவப்படம்

இந்த சூழ்நிலையில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படத்தையும், மறுபக்கம் லட்சுமி, விநாயகர் உருவங்களையும் அச்சிட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இவருடைய இந்த கோரிக்கை, அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இவருக்கு போட்டியாக பிற அரசியல் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்து வருகின்றன. அதில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ரூபாய் நோட்டில் அம்பேத்கர் படத்தை அச்சிடலாமே? என்று கூறியிருக்கிறார். மராட்டிய மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. இந்திய ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கிடையில் இதனை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதமும் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முயற்சி, சரியானதா? தற்போதைக்கு அவசியமானதா? இதனால் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களின் கருத்துகள் வருமாறு:-

விழுப்புரம் விராட்டிக்குப்பம் சமூக ஆர்வலர் லட்சுமி:-

ரூபாய் நோட்டில் சாமி படங்கள் என்பது தேவையற்றது. தேசத்தந்தையின் புகைப்படமே நிரந்தரமாக இருக்கலாம். இதை மாற்ற வேண்டும் என நினைத்தால் அரசியல் தலைவர்கள், சினிமா கலைஞர்கள் வரை நீண்டு கொண்டே போகும். மகாத்மாகாந்தி நம் தேசத்தின் அடையாளம். அவரும் அவரது பொக்கைவாய்ச் சிரிப்பும் நம் தேசத்திற்கும் நம் ரூபாய் நோட்டுகளுக்கும் பெருமையையும், பெருமிதத்தையும் அளிக்கிறது. இதை மாற்ற நினைப்பது தேவையில்லாத ஒன்று. பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இப்படி எல்லாம் சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். மாறாக நாட்டு நலனில், மக்கள் நலனில் அக்கறையும், கவனத்தையும் செலுத்தினால் நன்றாக இருக்கும்.

ஆம் ஆத்மி விழுப்புரம் மாவட்ட தலைவர் அருள்:-

எங்கள் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறந்த தலைவர், படித்த பண்பாளர். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர். மக்களின் மனதில் நன்மதிப்பை பெற்று கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே முதல்-மந்திரியானவர். அவருடைய எல்லா நடவடிக்கைகளையும் மக்கள் அனைவருமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர் அறிவிக்கும் எந்தவொரு அறிவிப்பாக இருந்தாலும் ஏதேனும் ஒரு அர்த்தம், நோக்கம் இருக்கும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் அவருக்கு நிச்சயம் கிடையாது. எங்கள் தலைவர் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்பதுதான் எங்களின் கருத்து.

செஞ்சி களையூரை சேர்ந்த கார்மேகன்:-

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் வாழும் மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் இந்து கடவுளை ரூபாய் நோட்டில் அச்சடிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். இதனால் நாட்டில் பிரிவினைவாதம் தான் வளருமே ஒழிய, பொருளாதார வளர்ச்சி காண்பது அரிது. உணர்ச்சி பூர்வமாக சொல்ல வேண்டுமானால் கிழிந்த சட்டையுடன் முதல்-அமைச்சராக இருந்த கர்மவீரர் காமராஜர் போன்றவர்களின் படங்களை ரூபாய் நோட்டில் அச்சடித்து பெருமைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

திண்டிவனம் நேரு வீதி வெங்கட்:-

ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் போன்ற சாமி படங்களை அச்சடிப்பது குறித்து கெஜ்ரிவால் தெரிவித்திருப்பது ஏதோ உள்நோக்கம் கொண்டதாகும். இந்தியாவில் மதச்சார்பற்று ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடையே இது போன்ற கருத்துக்கள் ஊரு விளைவிக்கும். மத பிரச்சினைகளையும் உருவாக்கும். எனவே தற்போது உள்ளபடி மகாத்மா காந்தியின் படமே ரூபாய் நோட்டில் இடம்பெற வேண்டும். 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூபாய் நோட்டுகளை புதிதாக வெவ்வேறு வண்ணங்களில் மாற்றம் செய்து அச்சடித்து புழக்கத்தில் விட வேண்டும். இதனால் கள்ள நோட்டுகள் மற்றும் கருப்பு பணத்தையும் ஒழிக்க முடியும். தற்போது டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை நடைபெற்று வருவதால் ரூபாய் நோட்டுகளை தேவைக்கேற்ப குறைந்த அளவில் அச்சடித்தால் போதுமானதாக இருக்கும். இதனால் அரசுக்கு செலவினங்களும் குறையும்.

திருக்கோவிலூர் சூர்யா:-

பெரும்பான்மையான சமுதாயமாக இ்ந்து மதத்தினர் உள்ள நாட்டில், இந்து மதத்தை பெருமைப்படுத்தும் விதமாக இதுபோன்று ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படம் அச்சிடும் போது, இது மற்ற மதத்தினர் இடையே சஞ்சலத்தை ஏற்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாட்டில், சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்களில் காந்தியின் படம் இருப்பதே சிறப்பாகும். தேவைப்பட்டால், நமது நாட்டை அந்நியர்களிடம் இருந்து மீட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க செய்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ரூபாய் நோட்டுகளுக்கும் ஏற்றாற்போல் சுதந்திர போராட்ட தியாகிகளின் படத்தை அச்சிட்டு அவர்களை பெருமைப்படுத்தலாம்.

கள்ளக்குறிச்சி ஆர்.எஸ்.ராஜா:-

அரபு நாடுகளில் மத அடையாளங்களை குறிக்கும் வகையில் ரூபாய் நோட்டுகளில் மெக்கா புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்திய ரூபாய் நோட்டிலும் கடவுளின் படங்கள் அச்சடிக்கப்படுவதால் நாட்டில் உள்ள மக்கள் ரூபாய் நோட்டுகள் மற்றும் பணத்தின் மீதுள்ள வெறுப்புகுறைந்து மன அமைதி ஏற்படும்.

மேலும் தமிழ் நாட்டின் தமிழ் மொழியின் தமிழ் கடவுள்களை அச்சிடுவதால், எவ்வித பாதிப்புகளும் இல்லை. இதில் சாதி மத பேதங்கள் இல்லாமல் அனைத்து மதத்தினரும் ஏற்கும் வகையில் இருக்கும். மேலும் நமது ரூபாய் நோட்டுகள் மீதான மதிப்புகளும் மற்ற நாடுகளில் அதிகரிக்கும். எனவே ரூபாய் நோட்டுகளில் கடவுளின் படங்கள் அச்சிடலாம்.

வாக்கு வங்கி அரசியல்

பொருளாதார விமர்சகர் சோம.வள்ளியப்பன்:- பொருளாதார வளர்ச்சி மற்றும் பணப்பெருக்கத்துக்கும், லட்சுமி, விநாயகர் உருவங்களை அச்சிட வேண்டும் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நம்பிக்கை ரீதியில் அவர் சொல்லியிருக்கலாம். அரவிந்த கெஜ்ரிவால் நன்கு படித்தவர். அவர் வேறு ஒரு உள்நோக்கத்துக்காக தான் இதை சொல்லியிருக்க வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். உலகத்தில் முன்னேறிய நாடுகள்கூட இப்படி முயற்சித்தது கிடையாது. மதிப்புமிக்க, வணங்கக்கூடிய இறைவனை இப்படி பயன்படுத்துவது சரியாக இருக்காது. மற்ற மதத்தினரும், இப்படி தங்கள் கடவுளை அச்சிடச் சொன்னால் என்ன செய்வார்கள்?. வாக்கு வங்கி அரசியலுக்காக இதை செய்வதாகவே நான் கருதுகிறேன். இதன்மூலம் வாக்குகள் கிடைக்கும் என்றாலும், அதுவும் நடக்குமா? என்பதும் கேள்விக்குறிதான்.


Next Story