வாகன நிறுத்துமிடம் அமைக்க நில அளவீடு தொடக்கம்


வாகன நிறுத்துமிடம் அமைக்க நில அளவீடு தொடக்கம்
x
தினத்தந்தி 14 Oct 2023 8:00 PM GMT (Updated: 14 Oct 2023 8:01 PM GMT)

வால்பாறை அண்ணா திடலில் வாகன நிறுத்துமிடம் அமைக்க நில அளவீடு தொடங்கியது.

கோயம்புத்தூர்

வால்பாறை அண்ணா திடலில் வாகன நிறுத்துமிடம் அமைக்க நில அளவீடு தொடங்கியது.

அண்ணா திடல்

கோவை மாவட்டம் வால்பாறையானது மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் உள்ளூர் மக்களும் பல்வேறு தேவைக்காக நகர் பகுதிக்கு வருகின்றனர். ஆனால் வாகனங்களை நிறுத்த எங்கும் போதிய இடவசதி இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வால்பாறை நகரின் மையப்பகுதியில் அண்ணா திடல் உள்ளது. இது யாருக்கும் பயன்படாமல் கிடக்கிறது. இதன் மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு எந்தவித வருவாயும் இல்லை. இந்த பகுதியை வாகன நிறுத்துமிடமாக மாற்ற அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

திட்ட மதிப்பீடு

இதைத்தொடர்ந்து வால்பாறை அண்ணா திடலில் நகராட்சி நிர்வாகம் சார்பில் வாகன நிறுத்துமிடம், கலையரங்கம், வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக நேற்று நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையிலும், துணை தலைவர் செந்தில்குமார் முன்னிலையிலும் நகராட்சி பணிமேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்து, நில அளவை செய்யும் பணியை தொடங்கினர்.

மேலும் கட்டிடம் கட்டுவதற்கு நவீன தொழில்நுட்பத்துடன் வரைபடம் வரைந்து திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்றது. அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் கடைகள் கட்டுவது, நடுத்தளத்தில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது, மேல் தளத்தில் கலையரங்கம் கட்டுவது என திட்டமிடப்பட்டு உள்ளது.


Next Story