வள்ளியூரில் லாரி மோதி வாலிபர் பலி- நண்பர் படுகாயம்


வள்ளியூரில் லாரி மோதி வாலிபர் பலி-  நண்பர் படுகாயம்
x

வள்ளியூரில் லாரி மோதி வாலிபர் தலை நசுங்கி பலியானார். அவருடைய நண்பர் படுகாயமடைந்தார்

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூரில் லாரி மோதி வாலிபர் தலை நசுங்கி பலியானார். அவருடைய நண்பர் படுகாயமடைந்தார்.

கொத்தனார்கள்

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருடைய மகன் ஜான் கிளமண்ட் (வயது 30). அதே பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் மகன் அந்தோணி ஜேசுதாஸ் (33).

கொத்தனார்களான இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் நேற்று தூத்துக்குடியில் கட்டுமான பணிகளை முடித்து விட்டு, மாலையில் தங்களது ஊருக்கு ஒரு ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றனர்.

லாரி மோதியது

நெல்லை மாவட்டம் வள்ளியூர் நாற்கரசாலை கேசவநேரி ரோடு சந்திப்பு பகுதியில் சென்றபோது, அங்கு சாலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு கம்பி (பேரி கார்டு) மீது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மோதியது.

இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த ஜான் கிளமண்ட், அந்தோணி ஜேசுதாஸ் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஜான் கிளமண்ட் மீது மோதியதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நண்பருக்கு தீவிர சிகிச்சை

படுகாயமடைந்த அந்தோணி ஜேசுதாசை நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இறந்த ஜான் கிளமண்டின் உடலை வள்ளியூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story