புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை:  பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு:  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேனி

கடைசி சனிக்கிழமை

பெரியகுளம் தென்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. வரதராஜ பெருமாளுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த வழிபாட்டில் பெரியகுளம் மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தென்கரையில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணருக்கு வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பு வழிபாடு

அதேபோல் தெற்கு அக்ரகாரத்தில் உள்ள நாமத்தவார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர்-ராதை அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். போடி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

சீனிவாச பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு திருப்பதி வெங்டாஜலபதி அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர், கோவில் தக்கார் ஆகியோர் செய்து இருந்தனர்.

நரசிங்கபெருமாள்

உத்தமபாளையம் அருகே கோம்பை மலைப்பகுதியில் திருமலைராயர் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் திருமலைராய பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலித்தார்.

உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோவிலில் நடந்த பூஜையில் நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story