நவீன தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்


நவீன தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்
x

கம்பம் அரசு மருத்துவமனையில் நவீன தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தேனி

கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் சுமார் 1,200-க்கும் மேற்பட்டோர் கம்பம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு அவசர சிகிச்சை, பொது மருத்துவம், தீக்காயம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல பிரிவு, கண்சிகிச்சை பிரிவு, டயாலசிஸ் சிகிச்சை உள்பட 35-க்கும் மேற்பட்ட மருத்துவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவை இல்லாமல் ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி., எக்ஸ்-ரே வசதியும் உள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் நவீன தீவிர சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் மருத்துவமனையில் 4 நவீன படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்னரசன் கூறுகையில், இந்த தீவிர சிகிச்சை பிரிவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வென்டிலேட்டர் படுக்கைகள், நவீன நடமாடும் வென்டிலேட்டர் கருவி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து உபகரணங்களும் உள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கும், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தோருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்க பயனுள்ளதாக இருக்கும் என்றார். இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷ்பாண்டியன் கூறுகையில், தனியார் மருத்துவமனைக்கு இணையாக இதய நோய்க்கும் சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை பிரிவில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கம்பம் பகுதி மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றார்.


Next Story