3 குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவதற்கு எதிர்ப்பு:விழுப்புரம், விக்கிரவாண்டியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


3 குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவதற்கு எதிர்ப்பு:விழுப்புரம், விக்கிரவாண்டியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:45 PM GMT)

3 குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம், விக்கிரவாண்டியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்


இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி.) 1860-ஐ மாற்றம் செய்ய பாரதீய நியாய சம்ஹிதா (பி.என்.எஸ்.) என்ற மசோதாவையும், குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.ஏ.) 1898-ஐ மாற்றம் செய்ய பாரதீய நாகரிக் கரக்ஷா சம்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) என்ற மசோதாவையும், இந்திய ஆதார சட்டம் 1872-ஐ மாற்றம் செய்ய பாரதீய சாக்ஷிய (பி.எஸ்) என்ற மசோதாவையும் மத்திய அரசு அறிமுகம் செய்து அதனை மக்களவையில் தாக்கல் செய்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கிரிமினல் கோர்ட்டு பார் அசோசியேசன் தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். வக்கீல் சங்கத் தலைவர் தயானந்தம், வக்கீல்கள் சண்முகம், மாரிமுத்து, ஜெயப்பிரகாஷ், தன்ராஜ், தமிழரசன், பத்மநாபன், துரைராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விக்கிரவாண்டி

இதேபோன்று, விக்கிரவாண்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத் தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஞானபிரகாசம் வரவேற்றார்.

3 குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு எதிராக வக்கீல்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் வக்கீல்கள் முருகன், பிரகாஷ் காளிதாஸ், சரவணன், கார்த்திக், ஜெயமாலா உள்ளிட்ட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

செஞ்சி

செஞ்சியில் நீதிமன்ற வளாகம் எதிரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மூத்த வக்கீல்கள் ஆத்மலிங்கம், ஹரிகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, பிரவீன், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள் சக்தி ராஜன், தர்மலிங்கம், செயலாளர்கள் ஜி.மணிகண்டன், ஆர்.மணிகண்டன் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story