அனைத்து கோவில்களிலும் தமிழிலேயே குடமுழுக்கு செய்வதற்கு சட்டம் இயற்ற மாநாட்டில் தீர்மானம்


அனைத்து கோவில்களிலும் தமிழிலேயே குடமுழுக்கு செய்வதற்கு சட்டம் இயற்ற மாநாட்டில் தீர்மானம்
x

அனைத்து கோவில்களிலும் தமிழிலேயே குடமுழுக்கு செய்வதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கரூர்

கரூரில் நேற்று உலக தமிழ் காப்பு கூட்டியக்கம் சார்பில் ஆகம தமிழ் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதற்கு உலக தமிழ் காப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் தலைமையுரை ஆற்றினார். ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராசன் தொடக்கவுரை ஆற்றினார். சாந்தலிங்க மருதாசல அடிகளார் உரையாற்றினார். மாநாட்டில், நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து கோவில்களிலும் தமிழிலேயே குடமுழுக்கு செய்வதற்கான வழிமுறைகளை வகுத்தளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை விரைவில் பெற்று சட்டம் இயற்றவோ, அரசாணை வெளியிடவோ வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வது. அனைத்துநிலை கோவில்களிலும் வழிபாட்டு சடங்குகள் அனைத்தும் தமிழிலேயே நடைபெற வேண்டும் என அரசாணை வெளியிட்டு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்து பாடத்திட்ட பள்ளிகளிலும், தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிலை கல்லூரிகளிலும் முதற்கட்டமாக அனைத்து வகுப்புகளுக்கும் தமிழ் ஒரு பாடமாக வைக்கப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பல்வேறு துறை சார்ந்த அரசு ஆணைகள், திட்டங்கள், தீர்மானங்கள், செயல்முறைகள் அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டுமென்ற கொள்கை முடிவை எடுத்து கடுமையாக நடைமுறைப்படுத்தமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்வது. ஒருசில மாநிலங்களில் இருப்பது போல தமிழே வழக்காடு மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாகவும், அலுவலக மொழிகளாகவும் அறிவிக்குமாறு மத்திய அரசை கேட்டு கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story