சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி சாவு


சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி சாவு
x
தினத்தந்தி 19 July 2023 9:15 PM GMT (Updated: 19 July 2023 9:15 PM GMT)

சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி சாவு

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே இட்டக்கல் பகுதியை சேர்ந்த விமலா என்பவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி ஒன்று நேற்று காலையில் அங்குள்ள சாலையோரம் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள், சோலூர் மட்டம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனச்சரகர் ராம்பிரகாஷ் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 2 வயது மதிக்கத்தக்க கன்றுக்குட்டி சிறுத்தை தாக்கி உயிரிழந்து இருப்பது உறுதியானது. இதையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகு அதே பகுதியில் கன்றுக்குட்டியின் உடல் புதைக்கப்பட்டது.

இதுகுறித்து வனச்சரகர் ராம்பிரகாஷ் கூறுகையில், கன்றுக்குட்டியை திறந்த வெளியில் கட்டி வைத்து இருக்கின்றனர். இதனால் சிறுத்தை தாக்க வரும்போது கன்றுக்குட்டியால் தப்பிச்செல்ல முடியவில்லை. எனவே கால்நடைகளை பாதுகாப்பான கொட்டகைகளில் அடைக்க வேண்டும். பாதிக்கபட்ட பெண்ணுக்கு அரசின் நிவாரண தொகை கிடைக்க பரிந்துரை செய்யப்படும் என்றார்.


Next Story