ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்; விவசாயிகள் பீதி


ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்; விவசாயிகள் பீதி
x

ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

திண்டுக்கல்

ஆத்தூர் காமராஜர் அணை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 24-ந்தேதி அணையை ஒட்டியுள்ள சடையாண்டி கோவில் அருகே ஒரு மானை சிறுத்தை அடித்து கொன்று இழுத்து சென்றதை விவசாயிகள் சிலர் பார்த்துள்ளனர். இதேபோல் ஆடு, நாய்களையும் சிறுத்தை அடித்துக்கொன்று இழுத்து சென்றுள்ளது. இதனால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் கன்னிவாடி வன சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் காமராஜர் அணை பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருந்ததை பார்த்து, சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து அணை பகுதியில் உள்ள தோட்டங்களில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story