7 மாவட்டங்களில் பாதிப்பு குறைவு; தமிழகத்தில் 2,722 பேருக்கு கொரோனா

7 மாவட்டங்களில் பாதிப்பு குறைவு; தமிழகத்தில் 2,722 பேருக்கு கொரோனா.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 1,495 ஆண்கள், 1,227 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 722 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 939 பேர், செங்கல்பட்டில் 474 பேர், திருவள்ளூரில் 191 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் 7 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு 10-க்கும் கீழ் குறைவாக உள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட 139 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 416 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் 837 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 18 ஆயிரத்து 687 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 7 ஆயிரத்து 335 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 840 பேரும், திருவள்ளூரில் 1,042 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






