அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற தமிழகத்தை உருவாக்குவோம்


அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற தமிழகத்தை உருவாக்குவோம்
x

எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கற்றுக்கொடுத்து அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற தமிழகத்தை உருவாக்குவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

விருதுநகர்

எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கற்றுக்கொடுத்து அனைவரும் எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற தமிழகத்தை உருவாக்குவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

சான்றிதழ் வழங்கும் விழா

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி பணிமனை தொடக்க விழா, விருதுநகர் அருகே நேற்று நடைபெற்றது.

ஏ.ஏ.ஏ. என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு, கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கியதுடன் பயிற்சி பணிமனையையும் தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ேபசியதாவது:-

இரு கண்கள்

தமிழகத்தில் கல்வியும், சுகாதாரமும் இரு கண்களாக எண்ணி பணியாற்றி வருகிறோம். முதல்-அமைச்சர் நிதி நெருக்கடி நிலையிலும் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரத்து 825 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 1901-ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 100 பேருக்கு 5 பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். கடந்த 2011-ல் நடந்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 74 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர்.

தற்போது தமிழகத்தில் 83 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். 15 வயதுக்கு மேல் பள்ளி செல்ல முடியாத நபர்களுக்காக பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நடப்பாண்டில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பயிற்சியினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கற்றுக் கொடுத்து அனைவரும் எழுத்தறிவு பெற்ற தமிழகத்தை உருவாக்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நல்ல திட்டங்கள்

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், குழந்தைகளையும், வயது வந்தோரையும் கற்றோராக மாற்ற முதல்-அமைச்சர் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.

விழாவில் தனுஷ் எம்.குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story