தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 29 Nov 2022 6:45 PM GMT (Updated: 29 Nov 2022 6:46 PM GMT)

முன்விரோத தகராறில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது

விழுப்புரம்

விழுப்புரம்

கூலித்தொழிலாளி கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மரூர் காலனியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 38) தொழிலாளி. கடந்த 17.3.2014 அன்று இரவு அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல் மகன் சரவணன்(28) மணிகண்டன் என்பவரிடம் மது வாங்க ரூ.100 தரும்படி கேட்டு தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த பெரியசாமி, அந்த தகராறை விலக்கி விட்டுள்ளார். அதற்கு பெரியசாமியிடம் நீ, மணிகண்டனுக்கு ஆதரவாக செயல்படுகிறாயா என்று அவரை சரவணன் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் மறுநாள் 18.3.2014 அன்று இரவு 7.30 மணியளவில் பெரியசாமி அதே பகுதியில் உள்ள ஒரு நிலத்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த சரவணன், முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியசாமியை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி இரும்பு சுத்தியால் பெரியசாமியின் தலையில் தாக்கினார். இதை தடுக்க வந்த மகேஸ்வரன், பெருமாள், மாயவன், கலியன் ஆகியோரையும் அவர் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வாலிபருக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்த புகாரின்பேரில் சரவணனை பகண்டை கூட்டுரோடு போலீசார் கைது செய்து அவர் மீது விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) வெங்கடேசன், குற்றம் சாட்டப்பட்ட சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சரவணன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்புராயலு ஆஜரானார்.


Next Story