பக்தர்களுக்காக ரூ.6½ கோடியில் 'லிப்ட்' வசதி


பக்தர்களுக்காக ரூ.6½ கோடியில் லிப்ட் வசதி
x

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்களுக்காக ரூ.6½ கோடியில் ‘லிப்ட்’ வசதி ஏற்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படுகிறது.

கோயம்புத்தூர்

வடவள்ளி

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்களுக்காக ரூ.6½ கோடியில் 'லிப்ட்' வசதி ஏற்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படுகிறது.

மருதமலை கோவில்

தமிழகத்தில் புகழ் பெற்ற முருகன் கோவில்களில் கோவை மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலும் ஒன்று. கோவை மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வர மலைப்பாதை மற்றும் படிக்கட்டுப்பாதை ஆகிய 2 வழித்தடங்கள் உள்ளன.

இதில் 100-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வயதான பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே லிப்ட் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இதை நிறைவேற்றும் வகையில் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.

லிப்ட் வசதி

இதுகுறித்து மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலின் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஹர்சினி கூறியதாவது:-

மருதமலைக்கு வயதான பக்தர்கள் சிரமமின்றி வந்து சாமி தரிசனம் செய்ய ரூ.6 கோடியே 45 லட்சம் மதிப்பில் லிப்ட் அமைக்க கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ராஜகோபுரம் படிக்கட்டை ஒட்டி வாகன நிறுத்துமிடம் அருகே 2 லிப்ட் அமைக்கப்படும். அங்கிருந்து 12 மீட்டர் உயரத்துக்கு லிப்ட் மேலே சென்ற பிறகு அங்கிருந்து 40 மீட்டர் தூரம் பக்கவாட்டு பகுதியில் பக்தர்கள் நடந்து வந்து, மற்றொரு லிப்ட்டில் ஏறி 8 மீட்டர் தூரம் மேலே சென்று கோவிலுக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடம்

ஒவ்வொரு லிப்டிலும் ஒரே சமயத்தில் தலா 20 பேர் செல்லலாம். அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தகுந்த நிறுவனம் தேர்வு செய்யப்படடு பணிகள் ஒப்படைக்கப்படும். கோவிலின் அடிவாரத்தில் 93 சென்ட் பரப்பளவில் ரூ.89 லட்சம் மதிப்பில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 50 பேர் முடிகாணிக்கை அளிக்கலாம். இதற்கான பணி ஆணை ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கப்படும். மருதமலை கோவிலின் மலைப்பாதை ரூ.3 கோடியே 56 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது. கோவிலில் இட நெருக்கடி இன்றி வாகனங்களை நிறுத்த ஏதுவாக மலையின் மீது ஒரே சமயத்தில் 200 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக கழிப்பிடமும் கட்டப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story