சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்


சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
x

18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெற அனுமதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செயும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ.டி.எம். இயந்திரம் போல் செயல்பட்டு மது மற்றும் பீர் வகைகளை விநியோகம் செய்ய பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் உள்ள தொடுதிரை மூலம் தேவையான மதுபான வகையை தேர்வு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தினால், தானாக மதுபானம் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்வது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதன்படி, சென்னையில் சோதனை அடிப்படையில் 4 எலைட் மதுபான கடைகளில் பணம் செலுத்தினால் மதுபானம் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரையடுத்து, பணம் செலுத்தி மதுபானத்தை பெற்றுக் கொள்ளும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம், 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெற அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story