பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு பயன்படுத்தலாம்


பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு பயன்படுத்தலாம்
x

ஹைட்ரோபோனிக் பசுமை குடில் முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து, கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தலாம் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்

மழைக்கு வாய்ப்பு இல்லை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 66.2 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 4 கி.மீ, 4 கி.மீ. மற்றும் 6 கி.மீ. வேகத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து வீசும்.

பசுந்தீவனம் உற்பத்தி

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் கோடை காலத்தில் போதிய அளவு பசுந்தீவனங்கள் கிடைக்காத போது, ஹைட்ரோபோனிக் பசுமை குடில் முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து, கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தலாம். இதேபோல் கால்நடைகளை கோடை வெப்பத்தில் இருந்து காக்க நல்ல காற்றோட்டம் உள்ள கொட்டகைகள் மற்றும் மர நிழல்களில் அவற்றை பராமரிக்க வேண்டும்.

கொட்டகையின் மேற்கூரையின் மீது தென்னங்கீற்று அல்லது வைக்கோல் பரப்பி அதன்மீது, தண்ணீர் தெளிப்பதன் மூலம் வெப்ப தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கலாம். மண்ணில்லா பசுந்தீவன வளர்ப்பு முறையில் 5 முதல் 7 நாட்களில் சுமார் 5 மடங்கு வரை மக்காச்சோள பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய வேண்டும். கறவை பசுக்களில் ஒரு பசுவுக்கு நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 கிராம் என்ற அளவில் அடர் தீவனத்துடன் தானுவாஸ் தாது உப்பு கலவையினை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story