பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி


பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:47 PM GMT)

பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி பெற ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி


ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி:


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பில்டர் காபி நிலையம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழி முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கு அளக்கப்படுகிறது.

மானியத்துடன் கூடிய கடனுதவி

விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும்.

இத்தொழிலை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தொழிலுக்கு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வரை திட்ட தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும்.

பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story