கும்மிடிப்பூண்டி அருகே லாரி - மோட்டார் சைக்கிள் மோதல்; 11-ம் வகுப்பு மாணவர் சாவு


கும்மிடிப்பூண்டி அருகே லாரி - மோட்டார் சைக்கிள் மோதல்; 11-ம் வகுப்பு மாணவர் சாவு
x

கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி 11-ம் வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள கீழ்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜசேகர் (வயது 18), யுகேந்திரன் (17), டேவிட் (18). இவர்களில் யுகேந்திரன் கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

நண்பர்களான 3 பேரும் கடந்த 9-ந்தேதி ஒரே மோட்டார் சைக்கிளில் கவரைப்பேட்டையில் இருந்து தச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை டேவிட் ஓட்டி சென்றார்.

புதுவாயல் அருகே புதுரோடு சந்திப்பில் உள்ள சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது, தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியே வந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி யுகேந்திரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story