பயணிகளின் கனிவான கவனத்திற்கு... சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி அறிவிப்பு..!


பயணிகளின் கனிவான கவனத்திற்கு... சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி அறிவிப்பு..!
x

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அறிவிப்புகள் வழக்கம்போல் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

ரெயில் நிலையத்தில் நுழைந்தாலே நம்மை முதலில் வரவேற்பது "பயணிகளின் கனிவான கவனத்திற்கு" என்ற இனிமையான வரவேற்பு தான். பின்பு நாம் செல்ல வேண்டிய ரெயில் வருகை, புறப்படும் நேரம், நடைமேடை எண், ரெயில் தாமதமாகும் நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ரெயில் நிலையத்தில் உள்ள ஒலிபெருக்கியே நமக்கு சொல்லிவிடும்.

பாமர மக்கள் தொடங்கி சாப்ட்வேர் என்ஜினீயர் என யார் ரெயில் நிலையத்துக்கு வந்தாலும் முதலில் கேட்பது அந்த ஒலிபெருக்கியின் சத்தத்தைதான். அந்த அளவுக்கு ரெயில் நிலைய ஒலிபெருக்கிக்கும், பயணிகளுக்குமான தொடர்பு நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி முதல் ஒலிபெருக்கி அறிவிப்புகள் முழுவதுமாக நிறுத்தப்படுவதாகவும் அமைதியான நிலைமை எனவும் அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, ரயில்களின் எண், நடைமேடை எண், புறப்படும்-வந்தடையும் நேரம் என அனைத்துத் தகவல்களும் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு நிறுத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அமைதியான நிலையமாக வைத்திருக்க செயல்படுத்தப்பட்ட நடைமுறைகள் திரும்ப பெறப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மீண்டும் ஒலிபெருக்கி அறிவிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ரெயில்களின் புறப்பாடு நேரம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒலிபெருக்கி மூலம் வெளியிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story