காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

சத்தியமங்கலம் அருகே திருமண வரவேற்பு விழா நடத்தாததால் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே திருமண வரவேற்பு விழா நடத்தாததால் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதல் திருமணம்

சத்தியமங்கலத்தை அடுத்த புளியங்கோம்பை அண்ணமார் கோவில் வீதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 22). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சத்யா (20).

இவர் கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 23-6-2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது சத்யா கர்ப்பமாக உள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலத்தில் உள்ள தனது தந்தை நாகராஜை பார்க்க செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு விஷ்ணு சென்றார். பின்னர் ½ மணி நேரம் கழித்து அவர் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டார். சத்யா அழைத்தும், அவர் அந்த அறையில் இருந்து வரவில்லை. மேலும் அக்கம் பக்கத்தினர் வந்து சத்தம் போட்டு அழைத்தும் அவர் அறையை விட்டு வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் சேலையால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே விஷ்ணு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

திருமண வரவேற்பு

இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவின் தந்தை நாகராஜிடம் முதல்கட்ட விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், 'காதல் திருமணம் செய்து கொண்ட தங்களுக்கு வரவேற்பு விழா நடத்த வேண்டும் என விஷ்ணு தந்தை நாகராஜிடம் கூறி உள்ளார். அதற்கு அவர் தற்போது சத்யா கர்ப்பமாக இருப்பதால் வளைகாப்பு மற்றும் வரவேற்பு விழாவை ஒன்றாக சேர்த்து நடத்தி விடலாம் என விஷ்ணுவிடம் கூறி உள்ளார். இதில் கோபப்பட்ட விஷ்ணு, வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும்,' தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண வரவேற்பு விழா தந்தை நடத்தாததால், தூக்குப்போட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Related Tags :
Next Story