சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு போக்குவரத்து பாதிப்பு


சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு போக்குவரத்து பாதிப்பு
x

குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்

குரோம்பேட்டை,

சென்னை திருவல்லிக்கேணி வெங்கட்ராம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் அருண் பாலாஜி (வயது 37). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான சொகுசு காரில் நண்பரை அழைத்து வருவதற்காக அவரது டிரைவர் பார்த்தசாரதி (22) என்பவர் நேற்று காலை திண்டிவனம் நோக்கி ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், சொகுசு கார் குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே வந்த போது, காரின் முன்பகுதியில் திடீரென கரும்புகை எழுந்தது.

இதனால் பதறிப்போன டிரைவர் பாலாஜி உடனடியாக காரை நிறுத்தி வெளியில் வந்தார். அதற்குள் காரில் புகை மூட்டம் அதிகமாகி சில நிமிடங்களில் தீ மள, மளவென பரவி கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் ஜி.எஸ்,டி. சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது. இந்த விபத்து காரணமாக ஜி.எஸ்.டி.சாலை பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story