மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு-ஒப்பந்ததாரர்கள் காணொலி மூலம் தேர்வு


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு-ஒப்பந்ததாரர்கள் காணொலி மூலம் தேர்வு
x

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ப்ரிடெண்டர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்களிடையே காணொலி மூலம் தகுதித்தேர்வு நடைபெற்றது.

மதுரை

திருப்பரங்குன்றம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ப்ரிடெண்டர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்களிடையே காணொலி மூலம் தகுதித்தேர்வு நடைபெற்றது.

எய்ம்ஸ் மருத்துவமனை

தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 2019-ல் ஜனவரி மாதம் 27-ந் தேதி அன்று மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோ.புதுப்பட்டியில் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1977.80 கோடியில் உலகத் தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதனையடுத்து எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கும் என்று மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

டெண்டர் அறிவிப்பு

ஆனால் அடிக்கல் நாட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் பணி தொடங்கப்படாத நிலையே நீடித்து வந்தது. அதனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி தொடங்குவது எப்போது? என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடமிருந்து நிதி கிடைக்கப்பட்டதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக வருகிற 18-ந்தேதி வரை ஒப்பந்த விண்ணப்பம் கோரப்பட்டது.

அதில் 870 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சிகிச்சை மையம், 30 படுக்கையுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சைக்கான அறை, 150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள், செவிலியர்கள் படிக்கக்கூடிய வகுப்பறைகள், மாணவர்களுக்கான தங்கு விடுதிகள், இயக்குனர்களுக்கான தங்கும் இல்லம், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், வணிக வளாகம், ஆகியவை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதை இரு கட்டங்களாக 33 மாதத்தில் முடிப்பதற்கு நிபந்தனை கூறப்பட்டுள்ளது.

தகுதி தேர்வு

இந்த நிலையில் ஆஸ்டின்பட்டியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அலுவலகத்தில் நேற்று காலையில் இயக்குனர் ஹனுமந்தராவ் தலைமையில் காணொலி மூலமாக தனியார் நிறுவனங்களின் ஒப்பந்ததாரர்களிடையே தகுதி தேர்வு நடந்தது. அதில் ஏராளமான தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்கள் பங்கேற்று காணொலி வாயிலாக தங்களின் நிறுவனங்களை பதிவு செய்தனர்.

நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் பரம் வர்சிங் ஜம்வால், தொழில் நுட்ப வல்லுனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடர்பாக தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தகாரர்களிடையே தகுதித்தேர்வு நடைபெற்று இருப்பது எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


Next Story