மதுரை: முத்து மாரியம்மன் கோவிலில் கூழ் அண்டாவில் தவறி விழுந்த கொத்தனார் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை


மதுரை: முத்து மாரியம்மன் கோவிலில் கூழ் அண்டாவில் தவறி விழுந்த கொத்தனார் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 29 July 2022 3:41 PM GMT (Updated: 29 July 2022 4:16 PM GMT)

மதுரை அருகே முத்து மாரியம்மன் கோவிலில் கூழ் அண்டாவில் தவறி விழுந்த கொத்தனார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை,

மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம்.

இந்த நிலையில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவில் முன்பு 6-க்கும் மேற்பட்ட பெரிய பாத்திரத்தில்( அண்டாவில்) இன்று மாலை கூழ் காய்ச்சி கொண்டு இருந்தார்கள். அப்போது மேலத்தெருவை சேர்த்த கொத்தனார் முத்துக்குமார் என்ற முருகன் (வயது54) கூல் காய்ச்சுவதற்கு உதவி செய்து கொண்டிருந்தார்.

திடீரென்று அவருக்கு காக்கா வலிப்பு வர எதிர்பாராத விதமாக கொதிக்கும் கூழ் பாத்திரத்தின் மீது சாய்ந்தார். அதில் அண்டா சாய்ந்து கொதிக்கும் கூழ் மீது விழுந்தார்.

அப்போது அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து சுப்ரமணியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story