மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில்ரூ.7.32 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்- அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்


மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில்ரூ.7.32 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்- அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
x

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.7.32 கோடி மதிப்பில் 23 வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை


மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ரூ.7.32 கோடி மதிப்பில் 23 வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

ரேஷன் கடை

அமைச்சர் மூர்த்தி, தனது கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டஉதவிகளை வழங்கி வருகிறார். மேலும் மக்களை அடிக்கடி சந்தித்து அவர்களிடம் மனுக்கள் வாங்கி அதன் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். நேற்று அவர், கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.7 கோடியே 32 லட்சம் செலவில் 23 வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் மஞ்சம்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம், ஊராட்சி ஒன்றிய பள்ளி சுற்றுச்சுவர் கட்டிடம், புதிய அங்கன்வாடி கட்டிடம் ஆகிய பணிகளை துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அதன்பின் சத்திரப்பட்டியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்து, 161 வீடுகளுக்கு புதிய குழாய் இணைப்புகளையும், காவனூரில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், புதிய ரேஷன் கடை மற்றும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும், வெளிச்சநத்தம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தையும் பயன்பாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மகளிர் சுய உதவிக்குழு

மேலும், மாலப்பட்டியில் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை மற்றும் தயாரிப்பு கூடத்தை திறந்து வைத்து 6 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 6 லட்சம் கடனுதவியை வழங்கினார். அதேபோல தெற்கு பெத்தாம்பட்டியில் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை மற்றும் தயாரிப்பு கூடம் மற்றும் புதிய நியாயவிலை கடை கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் ஆலத்தூர் ஊராட்சி மாரணிவாரியேந்தல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் இரணியம் ஊராட்சி அழகர் நகர் பகுதியில் புதிய தார் சாலை மற்றும் ஜாங்கிட் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான கட்டுமான பணிகள் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

வீரபாண்டி ஊராட்சி அய்யர் புதூர் மற்றும் வீரபாண்டி ஆகிய கிராமங்களில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களையும், வீரபாண்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடையையும், பேய்குளம் கிராமத்தில் புதிய ரேஷன் கடையையும் பயன்பாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

மேலும் இந்த கிராமங்களில் தனித்தனியாக பொது மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பின்னர் அமைச்சர் மூர்த்தி, நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊரகப்பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி நிறைவேற்றிட உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு கிராமங்களிலும் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களை உடனடியாக ஆய்வு செய்து தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story