பராமரிப்பு பணிகள் மும்முரம்: கரூர் உழவர்சந்தை குளத்துபாளையத்தில் செயல்படும்-அதிகாரிகள் தகவல்


பராமரிப்பு பணிகள் மும்முரம்: கரூர் உழவர்சந்தை குளத்துபாளையத்தில் செயல்படும்-அதிகாரிகள் தகவல்
x

கரூர் உழவர்சந்தையில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை வெங்கமேடு குளத்துபாளையத்தில் உழவர்சந்தை செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரூர்

கரூர் உழவர்சந்தை

கரூர் உழவர்சந்தை கடந்த 2000-ம் ஆண்டு பழைய பஸ்நிலையம் பகுதியில் தொடங்கப்பட்டது. இங்கு மொத்தம் 60 கடைகள் உள்ளன. கரூர் உழவர்சந்தைக்கு தினமும் சராசரியாக 120 விவசாயிகள் வருகை புரிகின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர் தினமும் வருகை புரிந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். 18 மெட்ரிக் டன் காய்கறிகள் வரத்து வருகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு பண்டிகை நாட்களில் 25 மெட்ரிக் டன் காய்கறிகள் வரத்து இருக்கும்.

இந்த உழவர் சந்தை தினமும் அதிகாலை 4.30 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் கரூர் உழவர்சந்தையை மேம்படுத்தும் வகையில் தண்ணீர் வசதி, கழிவறை, நடைபாதை சீரமைப்பு, கடைகளில் மேற்கூரைகள், தளங்கள் அமைப்பது, அலுவலகம் மேற்கூரை, தளங்கள் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

மறுஅறிவிப்பு வரும் வரை

கரூர் உழவர் சந்தையில் தற்போது ரூ.48 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை கரூர் உழவர்சந்தை தினமும் அதிகாலை 4.30 மணி முதல் காலை 8 மணி வரை தான் செயல்பட்டு வந்தது. இதனைதொடர்ந்து கரூர் உழவர்சந்தையில் உள்ள கடைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 20-ந்தேதி வரை கரூர் உழவர்சந்தை வெங்கமேடு குளத்துபாளையம் உழவர்சந்தையில் தற்காலிகமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால், மறுஅறிவிப்பு வரும் வரை கரூர் உழவர்சந்தை வெங்கமேடு குளத்துப்பாளையத்தில் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கரூர் உழவர்சந்தை நுழைவுவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.


Next Story