ஏ.சி. வெடித்து வாலிபர் சாவு


ஏ.சி. வெடித்து வாலிபர் சாவு
x

கும்பகோணம் அருகே ஏ.சி. வெடித்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே ஏ.சி. வெடித்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

ஏ.சி. வெடித்தது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் மேலமடவளாகம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிமாறன். இவருடைய வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டி(ஏ.சி.) பழுதானது. இதனையடுத்து நேற்று இரவு கும்பகோணத்தில் உள்ள தனியார் ஏஜென்சியில் வேலை பார்க்கும் தாராசுரம் பகுதியை சேர்ந்த சேக்லாவுதீன்(வயது24), கணேஷ்(23) ஆகிய 2 பேரும் மணிமாறன் வீட்டுக்கு சென்று பழுதடைந்த ஏ.சி.யில் கியாஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஏ.சி.யில் உள்ள சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது. இதில் சேக்லாவுதீன், கணேஷ் ஆகிய 2 பேருக்கும் உடல் முழுவதும் படுகாயங்கள் ஏற்பட்டன.

போலீசார் விசாரணை

ரத்த வெள்ளத்தில் துடி, துடித்துக் கொண்டிருந்த இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த சேக்லாவுதீனுக்கு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏ.சி. வெடித்து வாலிபர் இறந்தது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story