ஒலிபெருக்கியில் அதிக சத்தம் வருவதாக கூறியவர் வெட்டிக்கொலை - 7 பேர் கைது


ஒலிபெருக்கியில் அதிக சத்தம் வருவதாக கூறியவர் வெட்டிக்கொலை - 7 பேர் கைது
x

ஒலிபெருக்கியில் அதிக சத்தம் வருவதாக கூறியவரை 7 பேர் கும்பல் வெட்டிக்கொலை செய்து உள்ளனர்.

தாம்பரம்,

சென்னை, நாகல்கேணி காந்தி நகரை சேர்ந்தவர் நாகு என்கிற ஞானசம்பந்தன் ( வயது 46). அவரது சகோதரர் சரவணன் (56). இருவரும் சாலையோரம் தங்கி, கூலி வேலை செய்து வந்தனர். நேற்று இரவு, நாகல்கேணி, அண்ணா தெருவில் உள்ள காலி இடத்தில் மது அருந்தி உள்ளனர். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல், அவர்களிடம் தகராறு செய்தது.

பின், சகோதரர்கள் இருவரையும், அக்கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில், படுகாயமடைந்த நாகு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரவணன் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், நாகுவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த சரவணனை, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், பம்மல், பூம்புகார் நகரில், கடந்த 3-ம் தேதி, விநாயகர் சிலை வைத்திருந்த இடத்தில் ரேடியோவில் அதிக ஒலி உள்ளதாக கூறி, நாகு மற்றும் சரவணன் ஆகியோர் விழா நடத்தியவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கும் ராஜேஷ்குமார் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ராஜேஷிடம், கவனமாக இரு, இல்லையெனில் கொலை செய்துவிடுவோம் என நாகு மற்றும் சரவணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், பயந்துபோன ராஜேஷ்குமார் முந்திக்கொண்டு, நேற்று இரவு, நண்பர்கள் ஆறு பேருடன் சென்று, இருவரையும் வெட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக, சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, பம்மல், பூம்புகார் நகரை சேர்ந்த லாரி ஓட்டுனரான ராஜேஷ்குமார் (34) உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.


Next Story