ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியகூட்டுறவு மேலாளர் கைது


ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியகூட்டுறவு மேலாளர் கைது
x

குருசாமிபாளையத்தில் சங்க உறுப்பினர்களுக்கு நெசவு நூல் கொடுப்பதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்

கூட்டுறவு சங்க மேலாளர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமி பாளையத்தில் நெ.எஸ்.844 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தற்போது 260-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர். இந்த சங்கத்தில் 3 பேர் ஊழியர்களாக இருந்து வருகின்றனர். சங்க உறுப்பினர்களுக்கு பாவு கொடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இலவச வேட்டி சேலைகளை வாங்கி அரசுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் சேலைகள் கோவாப்ரேடிவ் நிறுவனத்திற்கும் அனுப்பப்படுகிறது.

இந்தநிலையில் குருசாமி பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (வயது 32) சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் சங்கத்தின் மேலாளர் (பொறுப்பு) பிரகாசிடம் பாவு நூல் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் மேலாளர் பிரகாஷ் ஒரு வேட்டிக்கு ரூ.5 தர வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விருப்பமில்லாத லோகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

மேலாளர் கைது

இதையடுத்து நேற்று மாலையில் சங்கத்திற்கு சென்று மேலாளர் பிரகாசிடம் ரூ.3 ஆயிரம் கொடுத்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் போலீசார் சங்கத்திற்குள் நுழைந்து கையும் களவுமாக மேலாளர் பிரகாசை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து லஞ்சமாக வாங்கிய ரூ.3 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கணக்கில் வராத ரூ.49 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து பிரகாசை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story