திருஉத்தரகோசமங்கை கோவிலில் புதுப்பொலிவுடன் நந்தி மண்டபம்


திருஉத்தரகோசமங்கை கோவிலில் புதுப்பொலிவுடன் நந்தி மண்டபம்
x

திருஉத்தரகோசமங்கை கோவிலில் பழமை மாறாமல் திருப்பணி நடந்துவருகிறது. இதனால் நந்தி மண்டபம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

ராமநாதபுரம்


திருஉத்தரகோசமங்கை கோவிலில் பழமை மாறாமல் திருப்பணி நடந்துவருகிறது. இதனால் நந்தி மண்டபம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

பழமை வாய்ந்த கோவில்

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில்.சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் பச்சை மரகதக் கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. தனி சன்னதியில் அமைந்துள்ள இந்த நடராஜரை தரிசிக்க திருவாதிரை ஆருத்ரா அன்று ஒரு நாள் மட்டுமே சன்னதி திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இந்த நிலையில் திரு உத்தரகோசமங்கை கோவிலில் உள்ள பழமையான நந்தி மண்டப பிரகாரத்தில் திருப்பணிகள் செய்யும்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருப்பணி

நந்தி மண்டபத்தை சுற்றி உள்ள கருங்கற்களினால் ஆன தூண்களில் இருந்த பாசிகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டு பழமை மாறாமல் இருக்க சுண்ணாம்புக்கல், கடுக்காய், கருப்பட்டி உள்ளிட்டவைகளை கொண்டு அரைக்கப்பட்ட கலவையை வைத்து மண்டபத்தின் பிரகாரத்தில் உள்ள தூண்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 4 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நந்தி மண்டபத்தின் திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இறுதி கட்டத்தை எட்டி திருப்பணிகள் செய்யப்பட்டு உள்ளதால் நந்தி மண்டபத்தில் உள்ள தூண்கள் புதுப்பொலிவுடன் பிரகாசமாக காட்சி அளித்து வருகிறது. இதை கோவிலுக்கு வரும் பக்தர்களும் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர்.

2-ம் பிரகாரம்

அடுத்த கட்டமாக சாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கருங்கற்களினால் ஆன தூண்களில் திருப்பணிகள் செய்யும் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திருப்பணிகள் அனைத்தும் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் மேற்பார்வை மற்றும் ஆலோசனைப்படி நடைபெற்று வருகிறது.


Next Story