காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட மண்டபம் மீனவர்கள் முடிவு

மீன்துறை அதிகாரிகள் அபராதத்தை வாபஸ் பெறக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட மண்டபம் மீனவர்கள் முடிவு செய்து உள்ளனர்.
பனைக்குளம்.
மீன்துறை அதிகாரிகள் அபராதத்தை வாபஸ் பெறக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட மண்டபம் மீனவர்கள் முடிவு செய்து உள்ளனர்.
அபராதம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஏராளமான நாட்டுப்படகுகளும் உள்ளன. இந்தப் படகுகளில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்களுக்கு மீன்வளத்துறை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அபராதம் வசூல் செய்து வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் தெற்கு மண்டபம் மீன்பிடி ஏல கட்டிடத்தில் நேற்று நடந்தது. இதற்கு அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் பாலன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த 16-ந் தேதி அன்று இரவு மண்டபம் கடல் பகுதியில் வழக்கம் போல் பிடிக்கச் சென்ற விசைப்படகுகளுக்கு தலா ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. கடந்த 16-ந் தேதி அன்று மண்டபம் விசைப்படகுகள் மட்டும் மீன்பிடிக்க செல்லவில்லை. ராமநாதபுரம் மாவட்டம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விசைப்படகுகளும் இதுபோன்று கடலுக்கு சென்றுள்ளன. எனவே மண்டபம் விசைப்படகுகளுக்கு மட்டும் விதிக்கப்பட்ட அபராத தொகை கட்ட இயலாது. அபராத தொகையை திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
காலவரையற்ற வேலை நிறுத்தம்
மேலும் அபராத தொகையை கட்ட வேண்டும் என மண்டபம் மீன் துறை கட்டாயப்படுத்தினாலும் மானிய டீசல் மற்றும் மீன்பிடி அனுமதி கேட்டு வழங்க மறுத்துள்ளதாலும் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்வதுடன் மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதில் மீனவர் சங்கத்தலைவர் ஜாகிர் உசேன், விசைப்படகு மீனவர் நலச்சங்கம் தலைவர் எஸ் நாகராஜன், விசைப்படகு மீனவர் முன்னேற்ற சங்கம் தலைவர் செய்யது சுல்தான், பாரம்பரிய மீனவர் சங்கம் செயலாளர் காதர் மைதீன், பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் அபூபக்கர், கடல் தாய் மீனவர் சங்கம் தலைவர் சுப்பிரமணியன், கோவில் வாடி மீனவர் சங்கம் தலைவர் பொன்னி சார்லஸ், செல்வின் மீனவர் சங்க தலைவர் செல்வகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.






