மாண்டஸ் புயல் எதிரொலி: ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு


மாண்டஸ் புயல் எதிரொலி: ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு
x

மாண்டஸ் புயல் காரணமாக ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக தேர்வு துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

சென்னை,

கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இளங்கலை பட்டபடிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 10-ந்தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்விற்கு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 97 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள் வழியாக கரையை கடக்கக்கூடும் எனவும் இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக தேர்வு துறை இயக்குநர் அறிவித்துள்ளார். வருகிற 10-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு வருகிற 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது.


Next Story