மாங்காய் ஊறுகாய் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய் ஊறுகாய் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கிருஷ்ணகிரி:
குறை தீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்கனவே கொடுத்த மனுக்களின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் பேசியதாவது:-
இயற்கை சீற்றங்களால் மா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவிற்கு காப்பீடு செய்ய வழிவகுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் மாங்காய் ஊறுகாய் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க வேண்டும். மார்கண்டேய நதி, தடதட ஆறு மற்றும் நாச்சிக்குப்பம் ஆறு இணையும் சிங்கிரிப்பள்ளியில் புதிய அணை கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மாரசந்திரம் தடுப்பணையில் இருந்து படேதலாவ் ஏரிக்கு செல்லும் கால்வாயை தூர்வார வேண்டும். ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியுறும் நிலை காணப்படுகிறது. மல்லிகை செடிகள் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.
உரிய நடவடிக்கை
தொடர்ந்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசுகையில், விவசாயிகளிடம் பெறும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுக்களுக்கு பதில் அளிக்கும் போது தெளிவாக உரிய விவரங்களை அளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு தரமான நெல் விதைகள் வழங்கப்படும். மா காப்பீடு தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கிரிப்பள்ளி அணை கட்ட 104 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 57 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமானது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி, மதிப்பீடு தயார் செய்யப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, துணை இயக்குனர் ராம்பிரசாத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ், வேளாண் அலுவலர் அருள்தாஸ் மற்றும் துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.






