மாம்பழ சங்க பண்டிகை; ஏழைகளுக்கு கிறிஸ்தவர்கள் தர்மம் வழங்கினர்


மாம்பழ சங்க பண்டிகை; ஏழைகளுக்கு கிறிஸ்தவர்கள் தர்மம் வழங்கினர்
x

பாளையங்கோட்டையில் மாம்பழச் சங்க பண்டிகையையொட்டி, ஏழைகளுக்கு கிறிஸ்தவர்கள் தர்மம் வழங்கினர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் மாம்பழச் சங்க பண்டிகையையொட்டி, ஏழைகளுக்கு கிறிஸ்தவர்கள் தர்மம் வழங்கினர்.

மாம்பழச் சங்க பண்டிகை

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலம் சார்பில், மாம்பழச் சங்கம் மற்றும் ஸ்தோத்திர பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாம்பழச் சங்கம், 243-வது ஸ்தோத்திர பண்டிகை நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாள் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் ஆலய வளாகத்தில் அருட்தொண்டர்களின் தியாக நினைவு ஸ்தோத்திர ஆராதனை நடந்தது.

தொடர்ந்து பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் குளோரிந்தாள் ஆலயத்தில் உள்ள மிஷினரிகளின் கல்லறைகளில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கிறிஸ்தவர்கள் பவனி நடைபெற்றது. தொடர்ந்து நூற்றாண்டு மண்டபத்தில் கொடியேற்று விழா, ஆயத்த ஆராதனை, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

ஏழைகளுக்கு தர்மம்

2-வது நாளான நேற்று காலையில் மாம்பழச் சங்க பண்டிகை நடந்தது. இதையொட்டி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் காலையில் சேகரகுரு ஜெபக்குமார் தலைமையில் திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.

மதியம் மாம்பழச்சங்க பிரதான பண்டிகை ஆராதனை நடந்தது. இதில் நெல்லை திருமண்டல பிஷப் பர்னபாஸ், கன்னியாகுமரி பிஷப் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டு தேவ செய்தி வழங்கினார்கள்.

விழாவில் திருமண்டல உப தலைவர் சுவாமிதாஸ், குருத்துவ செயலாளர் பாஸ்கர் கனகராஜ், சபை மன்ற தலைவர்கள் ஜெபராஜ், ஜெபக்குமார், இஸ்ரவேல் தனசிங், பிரே ஜேம்ஸ், தூய யோவான் கல்லூரி தாளாளர் கே.பி.கே.செல்வராஜ் மற்றும் திருமண்டல கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஏழைகளுக்கு கிறிஸ்தவர்கள் தர்மம் வழங்கினர். நூற்றாண்டு மண்டபம் முன்புள்ள சாலையில் இருபுறங்களிலும் அமர்ந்து இருந்த ஏராளமான ஏழைகளுக்கு பணம், அரிசி, ரொட்டி, உணவுப்பொருட்கள், துணிகள், மாம்பழம் போன்றவற்றை தானமாக வழங்கினர். மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இன்று, ஸ்தோத்திர பண்டிகை ஆராதனை

பாளையங்கோட்டை கதீட்ரல் ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலையில் 243-வது ஸ்தோத்திர பண்டிகை ஆராதனை, திருவிருந்து ஆராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.

ஸ்தோத்திர ஆராதனையில் சேகரங்கள், நிறுவனங்களின் சார்பில் காணிக்கை படைக்கப்படும். விழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) அனைத்து திருமண்டல நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

1 More update

Next Story