ரூ.49 லட்சம் மதிப்பில் யானை ருக்குவுக்கு மணிமண்டபம்

அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.49 லட்சம் மதிப்பில் யானை ருக்குவுக்கு மணிமண்டபம் கட்டுமான பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.49 லட்சம் மதிப்பில் யானை ருக்குவுக்கு மணிமண்டபம் கட்டுமான பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
மணிமண்டபம் கட்டும் பணி
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரம் அருகே ஒத்தவாடை தெருவில் ரூ.49 லட்சம் மதிப்பில் இறந்த யானை ருக்குவுக்கு மணிமண்டபம் கட்டும் பணியை கலெக்டர் முருகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் யானை ருக்கு கடந்த 2018-ம் ஆண்டு மறைந்தது. யானை ருக்குவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சட்டமன்ற அறிவிப்பு எண் 11-ன் கீழ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மணிமண்டபம் கட்டுவதற்கான அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டார்.
400 சதுரஅடி பரப்பளவு
அதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அம்மணி அம்மன் கோபுரம் அருகே ஒத்தவாடை தெருவில் ரூ.49 லட்சம் மதிப்பில் 400 சதுரஅடி பரப்பளவில் மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சனம், கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.






