சென்னையில் இன்று மாரத்தான் ஓட்டம்: போர் நினைவு சின்னம் முதல் திரு.வி.க. பாலம் வரை போக்குவரத்துக்கு தடை


சென்னையில் இன்று மாரத்தான் ஓட்டம்: போர் நினைவு சின்னம் முதல் திரு.வி.க. பாலம் வரை போக்குவரத்துக்கு தடை
x

சென்னை நேப்பியர் பாலம் முதல் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப்பள்ளி வரையில் 10 கி.மீ. மாரத்தான் ஓட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

'டெகாத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட்' நிறுவனம் சார்பில் சென்னை நேப்பியர் பாலம் முதல் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப்பள்ளி வரையில் 10 கி.மீ. மாரத்தான் ஓட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இப்பகுதிகளில் அதிகாலை 3 மணி முதல் காலை 10 மணி வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

* அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க.பாலம், டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எவ்வித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.

* போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க.பாலம் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு - வாலாஜா பாயின்ட் - அண்ணாசாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

* ஆர்.கே.சாலையில் இருந்து காந்திசிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை நெடுசாலை, லஸ் கார்னர், ஆர்.கே.மடம் சாலை வழியாக செல்லலாம்.

* திரு.வி.க. பாலத்தில் இருந்து 3 மற்றும் 2-வது அவென்யூ நோக்கி வரும் அனைத்து உள்வரும் வாகனங்களும் எம்.எல். பார்க் இடதுபுறம் திரும்பி- எல்.பி. சாலை சாஸ்திரி நகர் 1-வது அவென்யூவில் திருப்பி விடப்படும்.

* திரு.வி.க. பாலத்தில் இருந்து வரும் மாநகர பஸ்கள் உள்பட அனைத்து பஸ்களும் எம்.எல் பூங்காவில் திருப்பி விடப்படும். எல்.பி சாலை சாஸ்திரி நகர் 1-வது அவன்யூ, சாஸ்த்ரி நகர் பஸ் நிலையம் 2-வது அவென்யூ, 7-வது அவன்யூ சந்திப்பு, எம்.ஜி. சாலை- எல்.பி. சாலை வழியாக தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story