விவசாயிகள் சாலை மறியல்


விவசாயிகள் சாலை மறியல்
x

விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல், மேலத்தூவல், கிருஷ்ணாபுரம், கே.ஆர்.பட்டணம், விளங்களத்தூர், வெண்ணீர் வாய்க்கால், பருத்திகுளம் உள்ளிட்ட கிராம பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்குமேல் விவசாயிகள் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு கண்மாய்நீர் பாசனம் மூலமாகவும், கிணற்று பாசனம் மூலமாகவும் சாகுபடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்துவரும் ஆற்று தண்ணீர் வராததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இதையடுத்து கிராமங்களுக்கு வைகை ஆற்றில் இருந்து ஆற்று தண்ணீரை கொண்டுவர வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து வெண்ணீர் வாய்க்கால் பரமக்குடி பாண்டி கம்மாய் சந்திக்கும் தேசிய நெடுங்சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர்கள் கனகவல்லி முத்துவேல்,செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் முருகன், விவசாய தொழிற்சங்க தாலுகா செயலாளர் அங்குதான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தகவல் அறிந்த வருவாய் துறை, பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டதால் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story